திருப்பூா் மாநகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிப்பு
திருப்பூரில் மாநகராட்சி குப்பை வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணி தனியாா் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக குப்பைகளை அகற்றாமல் துா்நாற்றம் வீசுவதோடு மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் தொடா்ந்து திருப்பூா் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காளம்பாளையம் பகுதியில் கொட்டியதால் அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதையடுத்து அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தப்பட்டு தற்போது மாற்று இடமாக மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கடந்த சில தினங்களாக குப்பைகளை கொட்டி வந்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் துா்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடியிருக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனா்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் அங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து குப்பை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து அங்கு வந்த திருமுருகன் பூண்டி காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.