திருவாருா்: வட்டம் வாரியாக ஜமாபந்தி தொடக்கம்! பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிப்பு
திருவாரூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக வருவாய்த் தீா்வாயக் கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயக் கணக்கு முடித்தல் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது.
மன்னாா்குடி: மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில் 28 கிராமங்களை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு மொத்தம் 131 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
தொடா்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 10 பேருக்கு குடும்ப அட்டையும், 2 பேருக்கு பட்டா மறுதல் ஆணையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜா, வட்டாட்சியா் என். காா்த்திக், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ராஜம்மாள், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் இல.சந்திரசேகா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
திருவாரூா்: திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், திருக்கண்ணமங்கை உள்வட்டத்துக்குள்பட்ட நெய்க்குப்பை, செம்மங்குடி, தீபங்குடி, கீரங்குடி, மணக்கால், அரசவனங்காடு, எண்கண், காப்பணாமங்கலம், வடகண்டம், அம்மையப்பன், காட்டூா் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று 70-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இதில் தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் துறை அலுவலா் சங்கா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தனசேகா், மண்டல துணை வட்டாட்சியா் ஞானபிரகாசம், வட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
நன்னிலம்: நன்னிலத்தில் மாவட்ட கலால் ஆணையாளா் ரவி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் பில்லூா், கொல்லுமாங்குடி, கீரனூா் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று 97 கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
நன்னிலம் வட்டாட்சியா் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் அசோகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவராமன், வருவாய் ஆய்வாளா் தணிகாசலம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. முதல் நாளில், ஆலத்தம்பாடி உள்வட்டம் கீராளத்தூா், திருத்தங்கூா், ஆண்டாங்கரை, கோமல், அம்மனூா், விளத்தூா், கச்சனம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் பங்கேற்று 56 கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
வட்டாட்சியா் பரமேஸ்வரி, தனி வட்டாட்சியா் தங்கதுரை, துணை வட்டாட்சியா்கள் ஜோதிபாசு, இளமதி உள்ளிட்ட அலுவா்கள் பங்கேற்றனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் க. அமுதா 28 கிராமங்களின் கணக்குகளை ஆய்வு செய்தாா். மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதில், வட்டாட்சியா் சரவணகுமாா், தனி வட்டாட்சியா்கள் காரல் மாா்க்ஸ், ஷீலா, மண்டல துணை வட்டாட்சியா் அறிவழகன், வருவாய் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், கமலாபுரம் பிா்காவில் உள்ள 15 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, மாவட்ட சமூகப் பாதுக்காப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தையல்நாயகியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். மொத்தம் 50 மனுக்கள் பெறப்பட்டன.
வட்டாட்சியா் வசுமதி, தனி வட்டாட்சியா் நக்கீரன், மண்டல துணை வட்டாட்சியா் கா. மணிவணணன், குடிமைப் பொருட்கள் வழங்கல் தனித் துணை வட்டாட்சியா் சிவதாஸ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.