திருவொற்றியூரில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
திருவொற்றியூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், விம்கோ நகா், கேவிகே குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி உணவு வழங்கினாா். திருவொற்றியூா் கிழக்குப் பகுதி செயலா் தி.மு.தனியரசு, தேரடியில் சுமாா் ஆயிரம் பேருக்கு அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகப் பை, ஏழைகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கினாா்.
காலடிப்பேட்டை பகுதியில் 12-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கவி கணேசன், வட்டச் செயலா் வீ.சதீஷ்குமாா் ஆகியோா், இருபதுக்கும் மேற்பட்ட தெருக்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
மேலும், சுமாா் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகைச் சாமான்கள் அடங்கிய பைகளை வழங்கினா். கிராமத் தெரு, மாடவீதிகள், தேரடி, காலடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.