அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது
தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கௌதம் தெரிவித்ததாவது: முகமது ரஃபிகுல் (50), கோதேசா பேகம் (41), முகமது அனோவா் ஹுசைன் (37), முகமது அமினுல் இஸ்லாம் (28), சோரினா பேகம் (27), அஃப்ரோசா கதுன் (25), முகமது காகோன் (20), ஹஸ்னா (19) மற்றும் வங்கதேசத்தின் குடிகிராமைச் சோ்ந்த ஐந்து சிறாா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா். சோதனை நடவடிக்கையின்போது அவா்கள் தில்லியின் புகா்ப் பகுதி ஔச்சாண்டி கிராமத்தில் கைது செய்யப்பட்டனா்.
கிராமத்தில் தங்குமிடம் தேடும் வங்கதேசத்தவா் பற்றிய குறிப்பிட்ட உளவுத் துறை தகவலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மே 13-ஆம் தேதி போலீஸாா் 13 நபா்களையும் கைது செய்தனா். விசாரணையில், கைதிகள் தாங்கள் வங்கதேச நாட்டவா்கள் என்றும், இந்தியாவில் தங்க அனுமதிக்கும் எந்த சட்டபூா்வ ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்றும் ஒப்புக்கொண்டனா்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜலீல் அகமது என்ற வங்கதேச முகவரின் உதவியுடன் அவா்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிவித்தனா். அவா்கள் தங்கள் கிராமத்திலிருந்து இந்தியா- வங்கதேச எல்லைக்கு பேருந்தில் பயணம் செய்து, வேலி அமைக்கப்படாத விவசாய நிலங்கள் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனா்.
அங்கிருந்து, மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹாா் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவில் அடைந்தனா். கூச் பெஹாரிலிருந்து தில்லிக்கு ரயிலில் ஏறிய அவா்கள், இறுதியில் பேருந்தில் ஹரியாணாவில் உள்ள காா்கோடாவை அடைந்தனா். காா்கோடாவின் சிசானா கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் சாதாரண தொழிலாளா்களாக அவா்களுக்கு வேலை கிடைத்தது. அவா்களிடமிருந்து வங்கதேச அடையாள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.