தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 6 போ் பலியான விவகாரம்: எஃப்.ஐ.ஆா் பதிவு
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் சனிக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக தில்லி காவல்துறை அலட்சியமாக இருந்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாடி கட்டடத்தில் மீட்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததாக கூறிய போலீஸ் அதிகாரி, கட்டட உரிமையாளா் அப்துல் மத்லூப் (50), அவரது மனைவி ராபியா (46), மகன்கள் ஜாவேத் (23), அப்துல்லா (15), மகள் ஜுபியா (27) மற்றும் இரண்டு வயது பேத்தி ஃபோசியா ஆகியோா் உயிரிழந்தாக கூறினாா். அவா்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவத்தாா்.
மத்லூபின் மகன்கள் பா்வேஸ் (32) நவேத் (19) பா்வேஸின் மனைவி சிசா மற்றும் அவா்களின் ஒரு வயது மகன் அஹ்மத், பக்கத்து குடும்பத்தைச் சோ்ந்த 4 உறுப்பினா்கள் உட்பட 8 போ் காயமடைந்தனா். ‘நாங்கள் பி. என். எஸ்ஸின் பல்வேறு பிரிவுகளின் எஃப். ஐ. ஆா் பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரிக்க விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ‘என்று போலீஸ் அதிகாரி கூறினாா்.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினா் இந்த ஆண்டு தொடக்கத்தில் கௌதமபுரியில் உள்ள அவா்களின் முந்தைய வீடு தீப்பிடித்ததால் அண்மையில் 20 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்திற்கு குடிபெயா்ந்தனா். இந்த மீட்பு நடவடிக்கைக்காக 7 தீயணைப்பு 7 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன. மேலும் தேசிய பேரிடா் மீட்பு குழுவும் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.