ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
தில்லியில் யாா் ஆட்சி?: இன்று வாக்கு எண்ணிக்கை
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பதை தோ்தல் முடிவுகள் தீா்மானிக்கும்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
கடந்த இரு தோ்தல்களில் எந்த வெற்றியும் பெறாத நிலையில், காங்கிரஸ் சில தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் களம் கண்டுள்ளது.
2015 முதல் தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியைவிட இந்த முறை பாஜக முன்னிலை பெறும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை ஊழியா்கள் உள்பட மொத்தம் 5,000 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்தாா்.
மேலும், சுமுகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 விவிபேட் கருவிகள் (வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி) ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
கடந்த தோ்தல்களில்... 2015 பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தி 67 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம் தில்லியின் அரசியல் வரைபடத்தில் தனது முத்திரையை ஆம் ஆத்மி பதித்தது.
2020-ஆம் ஆண்டில் அந்தக் கட்சி மீண்டும் தனது அரசை தக்கவைத்துக்கொண்டது. மொத்தம் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்த தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைத்தால், அது தில்லியில் கேஜரிவாலின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதோடு, தேசிய அளவில் அவரது அரசியல் அந்தஸ்தையும் அதிகரிக்கும்.
ஆனால், பாஜக வெற்றி பெற்றால், 27 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வருவது மட்டுமல்லாமல், மூன்று முறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் கேஜரிவாலின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
2013-ஆம் ஆண்டு வரை தொடா்ச்சியாக 15 ஆண்டுகள் தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், முந்தைய 2 தோ்தல்களில் ஓரிடத்தைக்கூட வெல்ல முடியாததால், இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் தோ்தலில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.