தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!
சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊர்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 5 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.
அதேபோல், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் முத்துநகர், நாகர்கோவிலுக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில் ஆகியவற்றின் முன்பதிவுகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
மேலும், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களுக்கான முன்பதிவுகளும் முடிந்தன.
சிறப்பு சலுகை
ரயில்களில் அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பா் 17 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஊா் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவா்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.
இதற்கான கட்டண சலுகை பயணச்சீட்டை வரும் 14-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளான அக்.19-க்கான ரயில் முன்பதிவு புதன்கிழமையும் (ஆக. 20), தீபாவளி நாளான அக்.20-க்கான முன்பதிவு வியாழக்கிழமையும் (ஆக. 19) தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!