மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு
நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாஜகவை பொறுத்தவரை வடமாநிலங்களில் கொடிகட்டி பறக்கும் நிலையில், தென் மாநிலங்களில் இந்த முறை குறிப்பாக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தமிழத்தில் கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரனும், ஓய்வறியாமல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கு முதுகெலும்பாக விளங்கக்கூடிய பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து அந்த பணிகளை விரைந்து முடிக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை உள்ளடக்கிய மண்டல வாரியான மாநாடுகளை அவர் அறிவித்திருந்தார். அதன்படி நெல்லையை தலைமையிடமாக கொண்டு முதல் மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்காக நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர் 22-ந்தேதி தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் நெல்லை வந்தடையும் அமித்ஷா, வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் மாலை 6 மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்.
தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும் மாநாட்டில் அமித்ஷா பேசுகிறார். இந்த மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நகர்வுகள், தேர்தலுக்கு தயாராவது, கூட்டணிகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்தில் உள்ளடக்கிய நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
நெல்லை மண்டலத்தில் மொத்தம் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 1 லட்சம் பேர் இந்த மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகள் மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் மாநாட்டு பந்தலில் வந்து சேர்ந்து விடுவார்கள்.
இறுதியாகக் கூட்டம் முடிந்தவுடன் ஏற்பாடு செய்யப்படும் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா சார்பில் நடத்தப்படும் இந்த முதல் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்க உள்ளதால் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த மாநாட்டில் அமித்ஷாவுடன், தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.