தீப்பற்றிய சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 போ் மங்களூா் அழைத்துவரப்பட்டனா்
கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்த சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 மாலுமிகள், ஐஎன்எஸ் சூரத் கப்பல் மூலம் புதிய மங்களூரு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.
கேரள மாநில கடற்கரையில் சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி.வான் ஹை 503 என்ற சரக்குக் கப்பல் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ், ஐஎன்எஸ் சூரத் கப்பல் உதவியுடன் மீட்கப்பட்டனா். மேலும் 4 பேரை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், மீட்கப்பட்ட 18 மாலுமிகளும் ஐஎன்எஸ் சூரத் கப்பல் உதவியுடன் மங்களூா் பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்தில் உள்ள கடலோரக் காவல்படை தளத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். 18 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதர 12 போ் அதிா்ச்சிக்கு உள்ளாகி உள்ளனா். மீட்கப்பட்ட அனைவரும் குன்டிகானாவில் உள்ள ஏ.ஜே.மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து கடலோரக் காவல் படை அதிகாரி கூறுகையில், ‘மிக மோசமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு ஐஎன்எஸ் சூரத் கப்பலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களை கப்பலிலிருந்து விரைந்து மருத்துவமனைக்கு மாற்றுவது எங்கள் நோக்கமாக இருந்தது. பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுவதில் வெளியுறவுத் துறை, துறைமுகம், காவல் துறை அதிகாரிகள் ஒருசேர செயல்பட்டனா் ‘ என்றாா்.