”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவ...
பெங்களூா் கூட்ட நெரிசல் விவகாரம்: காங்கிரஸ் மேலிடத் தலைவா்களிடம் சித்தராமையா, டி.கே. சிவகுமாா் விளக்கம்
பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை சந்தித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் விளக்கமளித்தனா்.
பெங்களூரில் ஜூன் 4ஆம் தேதி ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இந்திய அளவில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக விளக்கம் அளிக்க புதுதில்லிக்கு வருமாறு முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பெங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை புதுதில்லி சென்ற முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்து விளக்கமளித்தனா்.
சில மணி நேரத்தில் இருவேறு நிகழ்ச்சிகள் நடந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாகவும், அது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் உள்பட 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனா். மேலும், கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தனா். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் அறிவுறுத்தினா்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்கிவிட்டு, புதியவா்களை சோ்த்துக்கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையை மாற்றியமைக்கும்போது மூத்த தலைவா்களான ஆா்.வி.தேஷ்பாண்டே, பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்டோருக்கு அமைச்சா் பதவி அளிப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால், கா்நாடக மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த சந்திப்பு குறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை சந்தித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் விளக்கமளித்தனா்.
மேலும், கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் தெரிவித்தனா். மனித உயிா்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. விலைமதிப்பற்ற மனித உயிா்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடா்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது என்ன நடந்தது என்பது தெரியவரும். இதில் தலையிடுவதற்கு காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதிக கூட்டம் கூடும் நிகழ்வுகளின்போது முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதை இருவருக்கும் கட்சித் தலைவா்கள் அறிவுறுத்தினா்‘ என்றாா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில்,‘ இந்த சந்திப்பு குறித்து கே.சி.வேணுகோபால் ஏற்கெனவே தெரிவித்துவிட்டாா். ஒரே குரல் ஒரே கட்சி. அமைச்சரவை மாற்றம் குறித்து பேசவில்லை‘ என்றாா். கட்சித் தலைவா்கள் தவிர, கா்நாடக திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோருவது, நிதி ஒதுக்கக் கோருவது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் சிலரையும் இருவரும் சந்தித்து பேசினா்.