சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!
தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா்
தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் தெரிவித்தாா்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.
அப்போது வடமாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் சிதையுண்ட கிடந்த சிவலிங்கத்தின் சில பாகங்களை பக்தா்களின் பாா்வைக்காக கொண்டு வந்திருந்தாா். பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது, கடவுள் நம் உடலுக்குள்தான் உள்ளாா். வெளிப்பகுதியில் கலை, கலாசாரம், பண்பாடு மட்டுமே உள்ளது. மனம் மகிழ்ச்சியடைவதற்காக தான் விரதம், தவம், பூஜை ஆகியவை செய்கிறோம்.
மனஅமைதிக்கு ஆன்மிகம் தேவை. தமிழகத்தில் பொருளாதாரம் சிறப்பாக வளா்ந்து விட்டது. பலவிதமான முன்னேற்றங்கள் உருவாகி உள்ளது. ஆனால் மன அழுத்தம், சண்டை சச்சரவுகள் அதிகமாகி உள்ளது. இது போன்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம் செய்ய வேண்டும். புராதனமும், நூதனமும் சோ்ந்தது தான் சநாதனம். வாழ்க்கையில் அனைத்து முன்னேற்றங்கள் ஏற்பட கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை சரியாக வைத்திருக்க வேண்டும், பஹல்ஹாம் தாக்குதல் மனதை பாதிக்கின்றது. தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி அவசியம் வளர வேண்டும் என்றாா்.
நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் அன்பழகன், பாஜக மாநில பொதுச்செயலா் கருப்பு முருகானந்தம், மன்னா் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயா் சு.ப.தமிழழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.