மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "எங்கள ரோட்ல போட்டுட்டு கியூபாவுக்காகப் பேசுறாரா ஸ்டாலின்" - சீமான்
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 12 நாட்களாக இரவும் பகலுமாகப் போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
இப்போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவளித்து வரும் சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் 10, 11 என இரண்டுமுறை போராட்டக் களத்துக்கு வந்ததோடு சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தனித்த ஆர்ப்பாட்டத்தையும் ஒருங்கிணைத்தார்.

இரண்டாவது நாளாக போராட்டக்காரர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த சீமான், செய்தியாளர் சந்திப்பில் "தமிழக அரசு தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்குப் பின்னால் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. தனியாருக்கென 270 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்களுக்கு நேரடியாக 30,000 ரூபாய் சம்பளம் வழங்கினாலும் 50 கோடிதான் செலவாகும், மீதி தொகை எங்குச் செல்கிறது?
தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் தனியார் இடம் கொடுத்துவிட்டால், மாநகராட்சி கட்டிடம் எதற்கு.. மாநகராட்சியின் வேலை என்ன.. எதற்கு இவ்வளவு மாமன்ற உறுப்பினர்கள், எதற்கு அவர்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்? எதற்குப் பல்லாயிரம் கோடி செய்து எதற்குத் தேர்தல் நடத்த வேண்டும்? அவர்கள் வேலை என்ன?" எனக் கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, "தூய்மைப் பணிகளைக் கையிலெடுக்கும் நிறுவனத்தின் முதலாளி ராம்கி என்கிற நபர் யார்? அவருக்கு சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வேண்டுதல் ஏதாவது இருக்கிறதா? அரசிடமிருந்து மாதத்திற்கு 270 கோடியை அரசு தனியாருக்குக் கொடுக்குமாம். ஆனால் 23 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்க தூய்மைப் பணியாளர்களை 16,000 சம்பளத்திற்கு வரச் சொல்வார்களாம்.
இது பெரும் கொடுமை. ஒருவேளை அந்தச் சம்பளத்திற்கு வரவில்லை என்றால் இவர்களை வெளியேற்றிவிட்டு வேறு ஒருவரை ஒப்பந்தத்திற்கு எடுப்பதாகவும் அவர்களும் வரவில்லை என்றால் வட இந்தியர்களைக் குறைந்த சம்பளத்திற்கு எடுத்து வேலை செய்ய வைப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால், கைது செய்ய அரசு திட்டமிடுவதாகத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, "மாமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன தூய்மைப் பணியாளர்களை இப்படி அச்சுறுத்துவது தானா, இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள் இல்லையென்றால் கைது செய்து உள்ளே வைப்போம் எனக் கூறுவதை ஏற்க முடியாது.
இது மக்களின் ஆட்சியா ரவுடிகளின் ஆட்சியா? தூய்மைப் பணியாளர்களை ரோட்டில் போட்டுவிட்டு கியூபாவைக் காப்பாற்ற வேண்டும் எனப் பேசக்கூடிய அரசு, உங்களுக்கு வாக்கு செலுத்தி ஆள வைத்த மக்களை உங்கள் நாட்டின் குடிகளைக் காப்பாற்றத் துப்பு இல்லை. இதில் கியூபாவைக் காப்பாற்றப் பேசுவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார் சீமான்