அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?
தேவாலயங்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ்: பினராயி விஜயன்
கத்தோலிக்க தேவாலயங்கள் நாட்டில் அதிக நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதாக ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகை செய்தி வெளியிட்டதற்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகையான ’ஆர்கனைஸர்’ வெளியிட்ட கட்டுரை ஒன்றில் நாட்டில் அதிகளவு நிலங்களை கத்தோலிக்க தேவாலயங்கள் கைப்பற்றியிருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், அந்த நிலங்கள் எவ்வாறு பெறப்பட்டது என்று அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தது.
இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வக்ஃப் மசோதாவுக்குப் பிறகு சங் பரிவாரம் தேவாலயங்களைக் குறிவைத்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகிறது. தேவாலய நிலங்கள் பற்றி குறிப்பிடப்படும் தேவையற்ற கருத்துகள் ஆபத்தான அறிகுறிகளை வெளிகாட்டும் விதமாக அமைந்துள்ளன.
அந்தக் கட்டுரையின் மூலம் ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான நோக்கம் வெளியே வந்துள்ளது. சங் பரிவாரம் முன்வைக்கும் பெரும்பான்மை வகுப்புவாதம் மற்ற மதங்களின் மீது பகையை உண்டாக்கும் வேலையே.
சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் பெரிய திட்டத்தின் கீழ் இந்தக் கட்டுரை பகிரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இதுபற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் இதுபற்றி பேசுகையில், “முஸ்லிம்களைத் தொடர்ந்து கிறித்தவ தேவாலயங்களை கைப்பற்ற பாஜக களம் அமைத்து வருகின்றது. அந்தக் கட்டுரை முழுக்க பொய்களும் வகுப்புவாதமும் நிறைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.