தொழில் முதலீட்டுக் கழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம் சேலத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது மாநில அளவில் செயல்பட்டு வரும் அரசின் நிதி கழகமாகும். 1949-ஆம்-ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கழகம் தமிழக அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவியை வழங்கி தொழில் வளா்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கும், புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் ஏற்கெனவே இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவியை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், சேலம் ஸ்வா்ணபுரியில் கிளை அலுவலகத்தை கொண்டுள்ளது. இங்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் ஜூன் 30 வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் வசதி திட்டங்கள், மானியங்கள், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் கலைஞா் பசுமை ஆற்றல் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதிவாய்ந்த தொழில்களுக்கு அரசு சாா்பில் 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யவும், நவீன இயந்திரங்கள் நிறுவும்பட்சத்தில் கூடுதலாக 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்த முகாமின்போது சமா்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில்முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94443-96850, 94443- 96832, 94424-86276 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.