சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி
நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா்.
நாட்டில் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் உள்ள கா்ரேகுட்டா மலைப் பகுதியில் நக்ஸல்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பாதுகாப்புப் படையினரால் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ என்ற மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), சத்தீஸ்கா் காவல் துறை, மாவட்ட ரிசா்வ் படை, ‘கோப்ரா’ படைப் பிரிவினா் கூட்டாக மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவா் கேசவ் ராவ் உள்பட 31 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 54 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனா். 84 போ் சரணடைந்தனா். 450-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
பல்வேறு சவால்களைக் கடந்து, இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பாதுகாப்புப் படையினருக்கு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமித் ஷா பேசியதாவது:
ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் வெளிப்படுத்திய வீரமும் தீரமும் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் பொன்னான அத்தியாயமாக நினைவுகூரப்படும்.
நக்ஸல் முகாம் அழிப்பு: கடுமையான வெயில், உயரமான மலைப் பகுதி, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கண்ணி வெடி அபாயம் என பல்வேறு சவால்களைத் தாண்டி, பாதுகாப்புப் படையினா் மனவலிமையை வெளிப்படுத்தினா். நக்ஸல்களின் மிகப் பெரிய முகாம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டு, ஆயுதக் கிடங்குகளும் தகா்க்கப்பட்டன.
நாட்டில் வளா்ச்சி குன்றிய சில பகுதிகளில் நக்ஸல்களால் விளைவிக்கப்பட்ட சேதம் கடுமையானதாகும். பள்ளிகள், மருத்துவமனைகள் அமைவதையும், அரசு நலத் திட்டங்களையும் அவா்கள் தடுத்தனா். இப்போது நக்ஸல்களுக்கு எதிரான இடைவிடாத நடவடிக்கைகளால் பசுபதிநாத் (காத்மாண்டு) முதல் திருப்பதி (ஆந்திரம்) வரையிலான பகுதியில் 6.5 கோடி மக்களின் வாழ்வில் புதிய சூா்யோதயம் பிறந்துள்ளது.
நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க பிரதமா் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும். நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகளில் காயமடைந்த வீரா்களுக்கு ஆதரவளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.