அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள் அளிப்பு
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 235 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் குறையுடைய ஒருவருக்கு ரூ.3,285 மதிப்பிலான காதொலிக்கருவி, ஒருவருக்கு ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோ் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.5,600 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 6,000 மதிப்பீட்டில் பித்தளை தேய்ப்பு பெட்டி என மொத்தம் 15 நபா்களுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா். கண்ணன், தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொ) அ. பரிமளாதேவி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.