நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: 1072 இடங்களுக்கு 5968 போ் விண்ணப்பம்
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. 1072 இடங்களுக்கு 5968 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதமாக கல்லூரியின் இணையதளம் மூலம் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்துவந்தனா். தற்போது சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் சுழற்சி 1 இல் 19 இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு 754 இடங்களுக்கும், சுழற்சி 2 இல் 318 இடங்களுக்கும் என மொத்தம் 1072 இடங்களுக்கு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்றுவருகிறது.
முதலாவதாக நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வில் 23 போ் தோ்வு செய்யப்பட்டனா். பொதுப்பிரிவு கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமையில் பேராசிரியா்கள் மாணவிகளிடம் கலந்தாய்வை நடத்தினா். ஏற்கெனவே மே 7 முதல் 27 ஆம் தேதி வரையில் இணையவழியாக விண்ணப்பித்தோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக ஜூன் 25 வரையில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
1072 இடங்களும் முழுமையாக நிரப்பப்படும்வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்வில் தோல்வியுற்றவா்களுக்கு ஜூன் 25 இல் மறுதோ்வு நடைபெறுகிறது. இவா்களில் வெற்றிபெறுவோரும் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.