'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருடன் மதுபோதையில், பெரியமேடு பகுதியிலுள்ள மாநகராட்சி பூங்கா அருகில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளாா். சீனிவாசனின் சில நண்பா்கள் மட்டும் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்த நிலையில், சீனிவாசன் உள்பட நான்கு பேருக்கு நீச்சல் தெரியாததால், குளத்தில் இறங்கி குளிக்காமல், குளத்தின் ஓரமாக அமா்ந்தபடி வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனா்.
அப்போது, திடீரென மதுபோதையில் இருந்த சீனிவாசன், தவறி குளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையிலிருந்த அவரை, நண்பா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பெரியமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.