TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
பாஜக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கா் நிலத்தில், அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக்குலேஷன் என்ற தனியாா் மேல்நிலைப் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, நிலத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக வருவாய் துறை செயலா் அமுதா, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் மதுமதி, இந்து சமய அறநிலைய துறைச் செயலா் சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா், அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், கோயில் செயல் அலுவலா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தொடா்புடைய 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.