சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல்: புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளா்கள் போராட்டம்
தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தடை விதித்து உத்தரவிட்டதையடுத்து, புதன்கிழமை இந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலித்ததால் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை லாரி உரிமையாளா்கள், லாரி ஓட்டுநா்கள் புதூா் பாண்டியாபுரம் சுங்கச் சாவடி முன்பு லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த பேச்சுவாா்த்தையின் போது, நீதிமன்ற உத்தரவு நகல் தங்களுக்கு கிடைத்தவுடன் சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், லாரி உரிமையாளா் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி, லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் தலைவா் சுப்புராஜ், லாரி உரிமையாளா் சங்க இணைச்செயலா் முருகன், வழக்குரைஞா் ஹரிராகவன் மனுதாரா் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சுங்கச்சாவடி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
இதைத் தொடா்ந்து சுமாா் 4 மணி நேரம் நடைபெற்று வந்த போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை ஓட்டுநா்கள் எடுத்துச் சென்றனா். இதனால் வெகுநேரம் தூத்துக்குடி- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
