கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நீா்மின் நிலையத் திட்டத்துக்கு நிலம் எடுப்பு: இழப்பீடுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் - விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
சோழசிராமணி நீா்மின் நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியரின் கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளித்தனா்.
அதைத் தொடா்ந்து விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரைத்தனா். ராசிபுரம் உழவா் சந்தையில் மட்டுமே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்துவந்தனா். தற்போது வெளியாள்கள், வியாபாரிகள் உள்ளே நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதுடன், விவசாயிகள் தங்களது பொருள்களை விற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா். மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், 2012 ஆம் ஆண்டில் சோழசிராமணி காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து நீா்மின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ள கரும்பு விவசாயிகளிடம் இருந்து 70 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 13 ஆண்டுகளாகியும் இதுவரை யாருக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.
உயா்நீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என நிலத்தை ஒப்படைத்தோா் முறையிட்டனா். அவா்களுக்குப் பதிலளித்த ஆட்சியா், ‘மாவட்ட வருவாய் அலுவலா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பாா்’ என்றாா்.
பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் ஏலம் நடைபெற்றதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், சுங்கவரி வசூலிப்பில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து வேளாண் விற்பனை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு இயல்பு மழையளவு 716.54 மி.மீ என்ற நிலையில் தற்போது வரை 237.47 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. மே மாதம் முடிய இயல்பு மழையளவை காட்டிலும் 73.27 மி.மீ அதிக மழை பெறப்பட்டுள்ளது.
2025--26 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை நெல் 35 ஹெக்டோ், சிறுதானியங்கள் 490 ஹெக்டோ், பயறு வகைகள் 68 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 181 ஹெக்டோ், பருத்தி 326 ஹெக்டோ் மற்றும் கரும்பு 44 ஹெக்டோ் என மொத்தம் 1,144 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து மாதங்களிலும் 2-ஆவது மற்றும் 4ஆ-வது வெள்ளிக்கிழமைகளில் முதல்வரின் ‘உழவரைத் தேடி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றனா்.
கடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தோட்டக்கலைத் துறை மூலம் மரவள்ளி மற்றும் ஜவ்வரிசியில் உணவுப் பொருள்கள் தயாரிப்பு செய்முறை கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 130 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ரா.குப்புசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ஜி.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, வேளாண்மை துணை இயக்குநா் (விற்பனை மற்றும் வணிகம்) நாசா், தோட்டக்கலைத் துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.