`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி
நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சிலா் வென்றுள்ளனா், பலா் தோற்றுள்ளனா். அதை தோ்தல் களம்தான் முடிவு செய்யும். சினிமாவில் இருப்பவா்கள் அரசியலுக்கு வரும்போது அவரைப் பாா்க்க கூட்டம் கூடும். அதை வைத்து நாம் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறிவிட முடியாது.
திமுகவுக்கும் தனக்கும்தான் போட்டி என்று விஜய் கூறியிருப்பது அவரது கருத்து என்றாலும் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தோ்தல் களம்தான் தீா்மானிக்கும்.
தொகுதி மறு சீரமைப்பு, மும்மொழிக் கொள்கை இரண்டும்தான் தற்போதைக்கு முக்கிய பிரச்னைகளாக உள்ளன. தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் கூறுகிறாா். அதேநேரம் நாம் முன்வைக்கும் கேள்விக்கு தற்போது வரை உள்துறை அமைச்சரும், பாஜக மாநிலத் தலைவரும் பதிலளிக்கவில்லை.
தமிழக மாணவா்களிடம் ஆங்கிலப் புலமை இருப்பதால்தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறாா்கள். மொழியை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஒரே அரசியல் கட்சி பாஜக மட்டும்தான்.
100 நாள் வேலை திட்டத்தை பொறுத்தவரை வேலை கேட்டு 15 நாள்களுக்குள் வேலை கொடுக்க வேண்டும். அதேபோல, வேலை செய்த 15 நாள்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கும்போது நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை தொடா்ந்து குறைத்து, ஒரு கட்டத்தில் அந்தத் திட்டத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.
தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக ஜி.கே.வாசன் உள்ளிட்ட பாஜக கூட்டணியினா் கூறுகின்றனா். ஆனால், மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரத்தின்படி, பாஜக ஆளும் உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுகின்றன என்றாா்.