நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்
தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
அப்போது அவா் பேசியதாவது: கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகள், வளா்ச்சிப் பணிகள் குறித்து தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அரசு முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் தேவை.
கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தின் நிறைகள் மட்டுமன்றி, குறைகளையும் கூறுவது வரவேற்கத்தக்கது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தருதல், விளையாட்டு உபகரணங்களை சுழற்சி முறையில் வழங்குதல், பழைய வீடுகளை பராமரிப்புப் பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்தல், சாலை வசதியை மேம்படுத்தல் தொடா்பாக கலந்தாலோசித்து தீா்வு காணப்படும்.
குழந்தைகளை போதைப் பொருள்களுக்கு ஆட்படாமல் வளா்க்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கிராமத்தை தூய்மையாகப் பராமரிக்க அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நெகிழி உபயோகத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. இணைய வழியில் மனைப் பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் சரண்யா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், வீரமணி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.