நெல்லையில் செப். 13-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!
திருநெல்வேலியில் இம் மாதம் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (மெகா லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இம் மாதம் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முதல் வட்ட நீதிமன்றங்கள் வரை அனைத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 9 வட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் செப்.13இல் காலை 9.45 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைக்க உள்ளாா்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்றவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.