பங்குச்சந்தை: 1000 புள்ளிகளை தாண்டிய சரிவில் நிப்டி; இன்று Black Monday-ஆ?!
அக்டோபர் 19, 1987.
அது ஒரு திங்கட்கிழமை.
அப்போது நிலவிய அரசியல் பரபரப்பு, புதிதாக சந்தையில் அறிமுகமான தொழில்நுட்பங்கள், நடந்த கரெக்ஷன்கள் போன்ற காரணங்களினால் உலகளவில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் சந்தை 22.6 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டது. அமெரிக்காவின் இன்னொரு சந்தையான எஸ் அண்ட் பி 500-ல் 30 சதவிகிதமும் குறைந்தது. இதன் தாக்கம் சில நாட்களுக்கு நீடித்தது.
அதனால், அந்தத் திங்கட்கிழமை 'பிளாக் மண்டே' (Black Monday என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது
37 ஆண்டுகளுக்கு பிறகு,
இன்று கிட்டத்தட்ட அதே நிலைமை பங்குச்சந்தையில் எட்டிப்பார்க்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பினால் உலகின் சொற்ப நாடுகளை தவிர, அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, அமெரிக்க பங்குச்சந்தை கிட்டதட்ட 1,500 புள்ளிகள் சரிவை சந்தித்தன. இந்த நிலையில் இருந்து மீளாமல் அடுத்த நாளும் கடும் சரிவில் தான் முடிந்தது அமெரிக்க பங்குச்சந்தை.
ஆக, கடந்த வாரத்தின் அமெரிக்க பங்குச்சந்தை பெரும் சரிவில் முடிவடைந்தது.
இதன் விளைவாகவும், பரஸ்பர வரியின் எதிரொலியாகவும் ஆசிய சந்தைகளும் இன்று 10 சதவிகித சரிவில் தான் தொடங்கியது.
இந்தியாவில் நிப்டி 1000 புள்ளிகள் சரிந்து இன்று தொடங்கியது.
ஆக, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இன்று வரலாற்றின் இன்னொரு 'பிளாக் மண்டே'வாக இருக்கலாம் என்பதை பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.