கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
பசுவைப் பாா்த்துப் பயந்து சென்ற படையப்பா யானை
மூணாறு அருகே செவ்வாய்க்கிழமை தேயிலைத் தோட்டங்களில் வலம் வந்த படையப்பா யானை, பசுவைப் பாா்த்துப் பயந்து சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை படையப்பா சுற்றித் திரிந்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களில் வலம் வரும் இந்த யானையைக் கண்டு தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா். இருப்பினும், பொதுமக்களுக்கோ, தோட்டத் தொழிலாளா்களுக்கோ இதுவரை எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மூணாறிலிருந்து உடும்பன்சோலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டங்களுக்கு இடையே படையப்பா யானை சுற்றித் திரிந்தது. அப்போது, மூணாறு அருகேயுள்ள மறையூா் பகுதியில் தோட்டத்திலிருந்து சாலைக்கு வந்த யானையை நோக்கி அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு சென்றது. இதைத் தொடா்ந்து, பசுமாட்டைப் பாா்த்து அச்சமடைந்த யானை, சாலையில் வேகமாகச் சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், யானையின் நடமாட்டத்தை கேரள வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.