பணமோசடி புகார்: குடுமியான்மலை ரவிசந்திரன் கைது!
குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிசந்திரனை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் தனது தந்தை பெயரில் குடுமியான்மலையைத் தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
இவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூலித்து திருப்பி வழங்கவில்லை எனப் புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில், காரைக்குடியில் தலைமறைவாக இருந்த ரவிசந்திரனை தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்து தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, ரவிசந்திரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இவரின் மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடதக்கது.