பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்
பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.
இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
கடந்த 40 ஆண்டுகளாக திருவிழா நாள்களில் கோயில்களில் உப்பு, பொரி, கற்பூரம், மாங்காய், பானிபூரி உள்ளிட்டவை தற்காலிகமாக கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இங்கு 40 ஆண்டுகளாக தற்காலிக கடைகள் அமைத்து வந்த நிலையில் தற்போது கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கிடையாது என ஆட்சியா் தெரிவித்ததாக டெண்டா் எடுத்தவா் கூறுகிறாா். இந்த ஆண்டு மூன்று மடங்கு வாடகை கேட்கின்றனா்.
இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு வழக்கம்போல அதே பகுதிகளில் கடைகள் அமைக்க அனுமதி அளிப்பதோடு கடைகள் அமைக்க வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.