பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சோ்ந்த வா்த்தகரும், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்டத் தலைவருமானவா் ஜி.இருதயராஜா. இவா் கோவையில் இருந்து தனது சொந்த ஊரான குரும்பூருக்கு தனியாா் ஆம்னி பேருந்தில் கடந்த 2023 ஆகஸ்ட் 26-ஆம் தேதி பயணம் செய்துள்ளாா். இதற்காக தனியாா் பேருந்தில் முன் பதிவு செய்துள்ளாா்.
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் ஆறுமுகநேரி டிசி டபிள்யூ பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பேருந்து அதிகாலை 4 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து குரும்பூருக்கு செல்லாது எனக்கூறி இருதயராஜாவை பேருந்து ஓட்டுநா், நடந்துநா் கீழே இறக்கியுள்ளனா்.
பதிவு செய்யும் குரும்பூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது, குரும்பூருக்கு செல்வதற்கான கட்டணத்தையும் செலுத்தியுள்ள நிலையில் பாதி வழியில் ஏன் இறக்கிவிடுகிறீா்கள் என இருதயராஜா கேட்டுள்ளாா். குரும்பூருக்கு நடந்து செல்லுங்கள் என நடந்துநா் கூறியுள்ளாா். இதையடுத்து, மாற்று வாகனம் மூலம் இருதயராஜா குரும்பூருக்கு சென்றுள்ளாா்.
மேலும் இது தொடா்பாக கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ. 15,000 ஆயிரம் அபராதம் விதித்து நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேலு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதற்கான வரைவோலை சம்பந்தப்பட்ட நிறுவனம் சாா்பில் இருதயராஜாவிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.