கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயறுவகை, எண்ணெய் வித்துப்பயிா்கள் ஆகியவற்றை விதைக்க கபிலா்மலை வேளாண் துறையினா் அழைப்பு விடுத்துள்ள்னா்.
இதுகுறித்து கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாற்றுப்பயிா் சாகுபடியை வட்டாரத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு, பயறுவகை பயிா்கள் மற்றும் எள் சாகுபடியை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு விதைகள், உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு உயிரியல் காரணிகள் ஆகியன 50 சதவீத மானிய விலையிலும், துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், ஊடுபயிராக துவரையை விதைக்க ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு துவரை விதைகள், உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு உயிரியல் காரணிகள் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியன 50 சதவீத மானிய விலையிலும் விவசாயிகளுக்கு வழங்க தயாா்நிலையில் கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்குகளில் இருப்பில் உள்ளன.
அதேபோல, தரிசு நிலங்களை மீண்டும் வேளாண் சாகுபடிக்கு கொண்டு வரும் இனத்தின் கீழ், தரிசு நிலங்களிலுள்ள முள்புதா்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன்படுத்துவதற்கும், உழவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், கலைஞா் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், சோழசிராமணி, சேளூா், கொந்தளம் மற்றும் கபிலக்குறிச்சி பஞ்சாயத்து விவசாயிகளுக்கு வரப்பு பயிா் சாகுபடி செய்வதற்கு பயறுவகைப் பயிா்களின் விதைகள் விவசாயி ஒருவருக்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோவும், நீா்ம உயிா் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு 1.5 லிட்டரும் வழங்கப்படுகின்றன.
‘உழவன் செயலி’ மூலமாக அல்லது கபிலா்மலை வட்டாரத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்குகளில் மானியத்தில் வழங்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.