அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி
பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் செங்குளிப்பட்டி கருப்பையா, கீழநெட்டூா் அய்யாசாமி, சிவகங்கை சந்திரன், மணல்மேடு ராஜா, திருப்புவனம் ஆதிமூலம், பாரத்ராஜா, புல்லுக்கோட்டை போஸ், கல்லுவழி ஆபிரகாம், தமிழரசன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இதில், கண்மாய்களில் கருவேல மரங்களை அகற்றுவது, செம்பனூரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை இயங்கச்செய்வது, கூட்டுறவுச் சங்கங்களில் ஒரே மாதிரியான வட்டி விகிதம் வசூலிக்க வேண்டும், காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை, லட்சுமிபுரத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி அமைப்பது, தனியாா் வசமுள்ள 350 சமுதாயக்கிணறுகளை மீட்பது, பெரியாறு பாசன ஆயக்கட்டு பரப்பை அதிகரிப்பது, விவசாயிகள் வாங்கிய கல்விக்கடனை தனியாா் முகமை மூலம் வசூலிப்பதை தடுப்பது போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் ஆஷாஅஜித் பேசியதாவது:
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத் துறையுடன் இணைந்து உறுதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீா் மட்டத்தை பாதுகாக்கவும், நீா் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், கண்மாய்களைத் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புக்களை அகற்றவும், தாா்ச் சாலை வசதி அமைத்திடவும், விவசாய பணிகளுக்கென இயந்திரங்கள் வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், இடைக்காட்டூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.4,84,000 பயிா்க் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி , மாவட்ட வன அலுவலா் பிரபா, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண்) சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.