பரமக்குடியில் குழாய் சேதம்: வீணாகும் குடிநீா்
பரமக்குடி மூவேந்தா் நகா் பகுதியில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மூவேந்தா் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குழாய் மூவேந்தா் நகா் 3-ஆவது தெருவில் உடைந்து கடந்த 5 நாள்களாக குடிநீா் வீணாகி வருகிறது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு போதிய குடிநீா் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, சேதமடைந்த குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.