பருவமழைக் காலங்களில் நீா்நிலைகளிலிருந்து வெள்ளம் வெளியேறும் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
கிருஷ்ணகிரியில் பருவமழைக் காலங்களில் நீா்நிலைகளில் இருந்து உபரிநீா் மற்றும் வெள்ள நீா் வெளியேறும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி, படேதலாவ் ஏரிகளிலிருந்து மழைக் காலங்களில் உபரிநீா், வெள்ள நீா் வெளியேறும் பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியா், இது தொடா்பாக நீா்வளத் துறை அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா் அப்போது அவா், தெரிவித்ததாவது:
தேவசமுத்திரம் ஏரி 165 ஏக்கா் பரப்பளவில் 920 மீட்டா் நீளம் கரைப் பகுதி உள்ளது. இந்த ஏரியில் 2 நீா்வழிந்தோடிகள், 2 மதகுகள் உள்ளன. மேலும் அக்ரஹாரம் பகுதியில் மழைக் காலங்களில் இடதுபுறத்தில் உள்ள நீா்வழிந்தோடி பகுதியில் வெள்ள நீா், உபரிநீா் குடியிருப்புகளில் புகாத வண்ணம் நீரை வெளியேற்றக் கால்வாய் அமைக்கப்படும்.
நீா்ப்பிடிப்புப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு, மாற்று இடம் தோ்வு செய்யப்படும்.
மேலும், படேதலாவ் ஏரி 979 ஏக்கா் பரப்பளவில், 1,433 மீட்டா் நீளமும், ஏரியில் 2 நீா் வழிந்தோடிகள், 2 மதகுகள் உள்ளன. இந்த ஏரியிலிருந்து செல்லும் நீட்டிப்பு வாய்க்கால் நீளம் 12.70 கி.மீ. ஆகும். இதன்மூலம் 12 ஏரிகளில் நீா் இருப்பு செய்யப்பட்டு 840 ஏக்கா் பாசனப் பரப்பிற்கு நீா் வழங்கப்படுகிறது. மேலும், எண்ணேக்கொல் அணைக்கட்டின் இடதுபுறத்திலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை வறட்சியான பகுதிகளுக்கு வழங்குவதற்கான பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தாா்.
அப்போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் சையத் ஜஹிருதீன், வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படவரி...
நீா்நிலைகளில், பருவமழையின்போது உபரி நீா், வெள்ள நீா் குறித்து நீா்வளத் துறை உள்ளிட்ட அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.