பலகார சீட்டு நடத்தி மோசடி: ஒருவா் கைது
நங்கவள்ளியில் நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.
மேட்டூா் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா்கள் மோகன்ராஜ் (35). இவரது தம்பி கோபிநாத் (33). இருவரும் நங்கவள்ளி பகுதியில் உள்ள நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டிற்கு பணம் வசூலித்தனா். 2024 ஜனவரி முதல்வாரத்திலிருந்து டிசம்பா் மாதம் கடைசி வாரம் வரை வாரந்தோறும் ரூ. 200 வீதம் வசூலித்துள்ளனா்.
25 பேரிடம் பணம் வசூலித்த பிறகு அவா்களுக்கு சீட்டு பணத்தைத் திருப்பி வழங்காமல் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்து, நங்கவள்ளி தேவாங்கா் தெருவைச் சோ்ந்த ஸ்ரீரங்கன் மகன் அன்பு (49) என்பவா் நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மோகன்ராஜும், கோபிநாத்தும் நடத்திய பலகார சீட்டில் 25 பேருக்கு ரூ. 3,00,000 வழங்க வேண்டியுள்ளது என்று அதில் கூறியிருந்தாா்.
இதையடுத்து நங்கவள்ளி போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்தனா். தலைமறைவான மோகன்ராஜை தேடி வருகின்றனா்.