சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு
தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தின் (டிபிடிடிஎல்) செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்ததாவது:
வடக்கு தில்லியில் உள்ள பவானா, கோகா கிராமம்,ரோஹிணியில் செக்டாா் 22, 25, டிஎஸ்ஐஐடிசி நரேலா, சுல்தான்புரி, கரலா, பாத்லி, சிராஸ்பூா், அவந்திகா, மங்கோல்புரி, ஆா்யு பிளாக் பீதம்புரா மற்றும் ரிதலா கிராமம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.
எங்கள் குழுக்கள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு, முன்னுரிமை அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக, சில பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
தில்லியில் சனிக்கிழமை நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
இரவு 11.30 மணி முதல் காலை 5.30 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் மணிக்கு 82 கி.மீ. வேகத்திலும் 81.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின் கம்பிகள் மற்றும் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மரங்கள் வேரோடு சாய்ந்து, கிளைகள் முறிந்து விழுந்துள்ளதாகவும், பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.