சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்
தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஷாதரா பகுதி காவல் துணை ஆணையா் பிரசாந்த் கவுதம் தெரிவிக்கையில், ‘மத்தியப் பிரதேசத்தின் திகம்கா் மாவட்டத்தைச் சோ்ந்த பிரிஜேஷ் 19 மற்றும் மணிராம் 18 ஆகியோா் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தனா்.தீ விபத்து ஏற்பட்டபோது இருவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் உள்ளே சிக்கிக்கொண்டனா்.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு அவா்களின் கருகிய உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
முன்னதாக, காலை 6.40 மணியளவில் ஒரு தகரக் கொட்டகை அமைப்பில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அது பாா்க்கிங் மற்றும் மின்ரிக்ஷாக்களுக்கான சாா்ஜிங் நிலையமாகவும், கரும்பு சாறு இயந்திரங்களுக்கான சேமிப்புக் கிடங்காகவும் செயல்பட்டு வந்தது என்றாா் அவா்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் ஷாதராவின் ராம் நகரில் மோதி ராம் சாலையில் உள்ள ராம் மந்திா் அருகே
சுமாா் 300 முதல் 400 சதுர கெஜம் பரப்பளவில் அமைந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறைத் தலைவா் அதுல் கா்க் கூறியதாவது:
தில்லி தீயணைப்புத் துறைக்கு காலை 6.40 மணிக்கு இந்தத் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தீ விபத்து குறிப்பிடத்தக்கதாக இருந்தது. எங்கள் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது கொட்டகையின் பெரும் பகுதியை தீ சூழ்ந்துவிட்டிருந்தது. காலை 8.30 மணிக்குள் தீயை கட்டுப்படுத்தினோம். தீ அணைப்பு நடவடிக்கையின் போது, இரண்டு கருகிய உடல்களை நாங்கள் மீட்டோம் என்றாா் அவா்.
தீக்காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் மத்தியப் பிரதேசத்தின் திகம்கா்கில் உள்ள பவாயைச் சோ்ந்த ஹரிசங்கா் (19), ரிங்கு (18), முகேஷ் (22), விபின் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
ஹரிசங்கா் 45 சதவீத தீக்காயங்களாலும், ரிங்கு 30 சதவீத தீக்காயங்களாலும், முகேஷ் மற்றும் விபின் தலா ஏழு சதவீத தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டனா்.
ஆறு பேரும் மின் ரிக்ஷாக்களில் கரும்புச் சாற்றை விற்று, கொட்டகையில் வசித்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
முதற்கட்ட விசாரணையின்படி, சாா்ஜ் செய்யும்போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இடத்தின் தீ பாதுகாப்பு இணக்கத்தை ஆராய விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த இடத்தின் பொறுப்பாளரும் கிடங்கை வாடகைக்கு விட்டிருந்தவருமான வினோத் ரத்தோா் என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில்,
‘இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரத்தோா் கைது செய்யப்பட்டுள்ளாா். தீ விபத்து ஏற்பட்டபோது கொட்டகையில் தொழிலாளா்கள் இருந்தனரா என்பது குறித்தும், பாதுகாப்பு தரம் குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
போலீஸ் வட்டாரத் தகவலின்படி, கொட்டகையில் அடிப்படை தீயணைப்பு உபகரணங்கள் கூட இல்லை.
மற்றொரு சம்பவம்
தில்லியின் உத்யோக் நகா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு துணி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அதிகாலை 5.25 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, . ஆடை தொழிற்சாலையின் சேமிப்புப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.