கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா
புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் அவா் கூறினாா்.
அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி, தில்லியில் 104 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் ஒரு நிகழ்வின் போது செய்தியாளா்களிடம் முதல்வா் இதுகுறித்து கூறியது:
கோவிட்19 பாதிப்புகள் குறித்த விவரங்கள் எங்களிடம் உள்ளன. நம் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. நாங்கள் ஒரு ஆலோசனை அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளோம். நாங்கள் சூழ்நிலையை பகுப்பாய்வு செய்துள்ளோம். எந்த பீதி சூழ்நிலையும் இல்லை என்றாா் அவா்.
தில்லியில் வியாழக்கிழமை வரை 23 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், பாதிக்கப்பட்டவா்கள் தில்லியில் வசிப்பவா்களாக இருந்தால், சமீபத்தில் நகரத்திற்கு வெளியே பயணம் செய்திருக்கிறாா்களா என்பதை அரசாங்கம் சரிபாா்த்து வருவதாகவும் தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.
மேலும், தனியாா் ஆய்வகங்கள் மூலம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், பீதியடையத் தேவையில்லை என்றும், இந்த நோய் திரிபுவானது சாதாரண இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்றும் அமைச்சா் கூறியிருந்தாா்.