`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
மாநிலங்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
நமது சிறப்பு நிருபர்
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலர் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்கக் கூடாது எனக் கூறி அதிமுக பிரமுகர் வா. புகழேந்தி தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்தவர் எனத் தன்னைக் குறிப்பிடும் வா. புகழேந்தி, தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அங்கீகரிக்கும் படிவங்களில் அதிமுக சார்பில் கையொப்பமிட எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல எந்தவொரு அணியின் தலைவருக்கும் உரிமை இல்லை.
2022-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 03-02-2023 அன்று அளித்த தீர்ப்பின்படி, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செயல்முறைக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு அப்பால் அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஈரோடு கிழக்கு பேரவைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது வேறு எந்தப் பிரிவினரும், அதிமுக சார்பாக படிவங்களில் கையொப்பமிட அதிகாரமில்லை என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் பொருளாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் 2024, மார்ச் 15-ஆம் தேதியிட்ட தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் விசாரணையின் செயல்பாட்டில் அதிமுக விவகாரம் உள்ளது.
மேலும், சிவில் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவடையும்வரை அதிமுகவின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்கிற வாதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநிலங்களவைத் தேர்தலுக்கு அதிமுக பொதுச் செயலர் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிடும் ஏஏ மற்றும் பிபி படிவங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.