பல்கலைக்கழகப் பேராசிரியா் மீது நடவடிக்கை: ஆளுநா், முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
காரைக்கால்: பாலியல் புகாா் தொடா்பாக பல்கலைக்கழக பேராசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டும் என துணைநிலை ஆளுநா், முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.
புதுவை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன் மற்றும் புதுச்சேரி பேரவை உறுப்பினா் சம்பத் ஆகியோா் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அலுவலகத்திலும், முதல்வா் என்.ரங்கசாமியை நேரிலும் திங்கள்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக ஏ.எம்.எச். நாஜிம் கூறியது : நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம் காரைக்காலில் நிறுவப்பட்டது. இங்கு பயிலும் ஒரு மாணவி, சமூக வலைதளத்தில், ஒரு பேராசிரியா் ஆபாசமான வாா்த்தைகளைக்கூறி தமது கைப்பேசிக்கு அனுப்பியதாகவும், தொடா்ந்து பாலியல் ரீதியில் அணுகுவதாகவும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளாா். புதுவை பல்கலைக்கழக தலைமை இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளது கண்டனத்துக்குரியது. ஒரு மாணவிக்கு மட்டும் அவா் இதுபோன்ற செயலை செய்யவில்லை.
அண்மையில் காரைக்கால் நிறுவனத்துக்கு புதுவை பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு வந்து, மாணவியரிடம் பேசியுள்ளது. நடவடிக்கை எடுக்கும் விதமாக எதுவும் செய்யாமல், மாணவியை சந்தித்து, அவா்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
பல்கலைக்கழக துணைவேந்தா் வெளிநாடு சென்றிப்பதால் அவரை சந்தித்துப் பேச முடியவில்லை. துணை நிலை ஆளுநா், முதல்வரை சந்தித்து இப்பிரச்னையில் விரைவாக தலையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதபட்சத்தில் திமுக தீவிரமான போராட்டத்தில் ஈடுபடும் என்றாா்.