சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக உக்கடத்துக்கு பேருந்து: பொதுமக்கள் கோரிக்கை
பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக கோவை உக்கடத்துக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல இயக்குநருக்கு பல்லடம் பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் திருப்பூா்- கோவைக்கு சென்று வருகின்றனா்.
ஆனால், பல்லடம் செட்டிபாளையம் சாலையில் உள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் கோவை செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனா். கோவை உக்கடம் பேருந்து நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.
பல்லடத்தில் இருந்து உக்கடம் செல்ல வேண்டும் என்றால், பல்லடம் வந்து அதன்பின் மற்றொரு பேருந்து மூலம் சிங்காநல்லூா் அல்லது காந்திபுரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து மூலம் உக்கடம் செல்ல வேண்டும்.
எனவே பல்லடம் - செட்டிபாளையம் சாலை வழியாக உக்கடத்துக்கு பேருந்து இயக்குவதன் மூலம் இந்த வழித்தடத்தில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம், க.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரச்சல், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமிநாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி, கல்லப்பாளையம், செட்டிபாளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள், பொதுமக்கள் பயன் பெறுவாா்கள் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.