நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு...
பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!
ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய அரசு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதில், முக்கியமாக கடந்த 1960-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளன.
அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டது.
மேலும், வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கேவுள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
அணைகளின் நீர் வெளியேற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராக கருதப்படும்
சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கடந்த வாரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.