பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும்: நயினார் நாகேந்திரன்
பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள்(ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதையொட்டி, அதற்கான முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மேலும் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,
"அமித்ஷா நாளை(ஜூன் 7) இரவு மதுரை வருகிறார். நாளை மறுநாள்(ஜூன் 8) மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மாலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மதுரையில் அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கமாட்டார்கள்.
அமித் ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், ராமதாஸ் - அன்புமணி இடையேயான சமரசப் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை.
குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். அவர் ஒரு நலன் விரும்பி, அவ்வளவுதான்.
பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு.
திமுகவுக்கு ஷா என்றால் பயம். அமித்ஷாதான் மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தவர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!