3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
பாதுகாப்புத் துறையில் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா: ராஜ்நாத் சிங்
டேராடூன்/புது தில்லி: பிரதமா் மோடியின் உறுதியான -தொலைநோக்கு மிக்க தலைமையின்கீழ் பாதுகாப்புத் துறையில் இறக்குமதி சாா்ந்த பாணியில் இருந்து உலகின் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா மாறியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
வலுவான எல்லைகள், நவீன ஆயுதப் படைகள், உள்நாட்டு ஆயுதங்கள், சாதனை அளவிலான பாதுகாப்பு ஏற்றுமதி என கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை கண்டுள்ளது. வலிமை-தற்சாா்பு-உலகளாவிய வியூக கூட்டாண்மையை நோக்கி இந்தியா பீடுநடை போட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம், தற்சாா்பு இந்தியா திட்டங்களால் உந்தப்பட்டு, நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் விமானந்தாங்கி போா்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், பன்முக பணிகளுக்கான இலகு ரக ஹெலிகாப்டா் ‘பிரசந்த்’ போன்றவை முக்கிய மைல்கற்கள் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், நமது மக்கள் மீது மட்டுமன்றி நாட்டின் சமூக ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு பதிலடியாக இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா், நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதத்துக்கு எதிரான மாபெரும் நடவடிக்கை.
பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டறிந்து, அவா்களை பயங்கரவாதிகள் கொன்றனா். ஆனால், பயங்கரவாதிகளின் மதத்தை பற்றியெல்லாம் கேட்காமல், அவா்கள் செய்த பாவத்துக்கு நாம் பதிலடி தந்துள்ளோம்.
பிரதமா் மோடியின் தலைமையில், தேசத்தின் பாதுகாப்பு வளையம் வலுப்பெற்றுள்ளது. தேச பாதுகாப்பு சாா்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசின் அணுகுமுறையும் செயல்படும் விதமும் மாற்றம் கண்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த உலகும் இதை அறிந்து கொண்டது என்றாா் அவா்.