Aamir Khan: "என் கனவுப் படமான மகாபாரதம்தான் என் கடைசிப் படமா?" - நடிகர் ஆமீர் கா...
`எவரெஸ்ட் பனி மலையில் பிடிபட்ட ராஜநாகங்கள்' - எச்சரிக்கும் காலநிலை; சூழல் விஞ்ஞானிகள் அஞ்சுவது ஏன்?
நேபாளம் நாட்டில் எவெரெஸ்ட் மலைக்கு அருகில் 9 ராஜநாகம் மற்றும் ஒரு ஒற்றைக் கண் நாகம் (Monocled cobra) என10 விஷ பாம்புகள் ஒன்றரை மாத இடைவெளியில் பிடிபட்டுள்ள நிகழ்வு சூழல் விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த நாகங்கள் கோபாலேஷ்வர், பன்ஜியாங், சோகோல் மற்றும் ஃபுல்சௌக் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற வளாகங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் ராஜநாகத்தின் புற்றையும் முட்டைகளையும் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜநாகம் உலகிலேயே நீளமான விஷப் பாம்பு ஆகும். மற்ற பாம்புகளின் விஷத்தை ஒப்பிடுகையில் இவற்றின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது இல்லை என்றாலும் ஒரே கடியில், 20 பேரை அல்லது ஒரு வளர்ந்த யானையைக் கொல்லும் அளவுக்கு அதிக விஷத்தை வெளியிடும்.
இந்த நாகங்கள் அழிந்துவரும் உயிரினமாக நேபாளத்தின் தேசிய சிவப்பு தரவு புத்தகம் மற்றும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அறிவியலாளர்கள் அஞ்சுவது ஏன்?
ராஜ நாகங்களும் ஒற்றைக் கண் நகமும் தெற்கு நேபால் மற்றும் வட இந்தியாவில் உள்ள தாராய் பகுதிகளில் வசிப்பவை. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அவை மலைப்பிரதேசங்களை நோக்கி நகன்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நேபாளம் காலநிலை மாற்றத்தால் மோசமான வானிலை நிகழ்வுகளைச் சந்தித்து வருகிறது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை ஆண்டுக்கு 0.5% என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
ராஜ நாகங்களின் வாழ்விடங்கள் அழிந்துவருவதால், மனிதர்கள் - பாம்புகள் மோதல் அடிக்கடி நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும், நேபாளத்தின் தாராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 2,700 பேர், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள், பாம்புக்கடியால் இறக்கின்றனர்.
மார்ச் 2022-ல் முன்னணி சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கோடைகாலத்தில் தாராய் பகுதிகளில் பாம்புக்கடியால் மக்கள் இறப்பது சகஜமாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.