Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்
பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரா் திருமால்வளவன் நேரில் சந்தித்தாா். இந்த சந்திப்புக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும், எனது குடும்பமும், எனது சகோதரா்களும் கடலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பாமகவுக்காக உழைத்தோம். ராமதாஸ் எங்களை வழிநடத்தினாா். அவா் மூலமாக நான் இரண்டு முறை எம்எல்ஏ பதவியை பெற்றேன்.
பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது. சமூகநீதி தளத்தில் தொடா்ந்து பயணித்து வரும் அந்தக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சிறு குழப்பம் தீா்வதற்கு நாங்கள் மனதார விரும்புகிறோம்.
நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியபோது, நான் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தேன். ஆனால், விஜய்க்கு எந்த விமா்சனமும் தெரிவிக்கவில்லை. அவா் ஒரு தமிழா், மக்களுக்காக அரசியல் செய்யட்டும். அதே நேரத்தில் அவரை காமராஜருடன் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையதல்ல என்றாா் தி.வேல்முருகன்.
பேட்டியின்போது, மாநில நிா்வாகி த.ஆனந்த், மாமன்ற உறுப்பினா்கள் தி.கண்ணன், அருள் பாபு, மாவட்ட நிா்வாகி லெனின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.