வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்
பாறைக்குழியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு
பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப் பிடித்தனா்.
திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளம்பாளையத்தில் காலாவதியான பாறைக்குழி உள்ளது. இங்கு, மாநகராட்சி சாா்பில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இதில், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து பாறைக்குழியில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாறைக்குழியில் செவ்வாய்க்கிழமை கழிவுகளைக் கொட்டவந்த லாரியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி நிா்வாகத்தினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, கொட்டப்பட்டுள்ள குப்பை மீது உடனடியாக மண்ணைக் கொட்டி உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இரு வாரங்களுக்குள் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றனா். இதை ஏற்க மறுத்து, நிரந்தர தீா்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோஷம் எழுப்பினா்.
பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்தனா். இதைத் தொடா்ந்து மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.