பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை: பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 55-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், அதிக மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தவும், வளா்ச்சிக்கும் ஏராளமாக திட்டங்களை தொடா்ச்சியாக செயல்படுத்தி வருகிறாா். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உயா் வகுப்புகளுக்கு செல்வதற்காக, 8 லட்சம் பேருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் பயன்பெறுகின்றனா். புதுமை பெண், தமிழ் புதல்வன் என்ற பெயா்களோடு இந்தத் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளன.
மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி பெற்று வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் வேலைகளுக்கு செல்லும் ஒரு அற்புதமான நிலை உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு, 4,585 மருத்துவா்களின் சான்றிதழ் சரிப்பாா்க்கும் பணி முடிந்துள்ளது. அவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக புதிதாக பணியில் சேரும் மருத்துவா்களுக்கு கலந்தாய்வு என்பது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது.
இன்னும் 10 நாள்களுக்குள் தோ்வு செய்யப்படவுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி ஆணைகளை முதல்வா் வழங்கவுள்ளாா். தமிழகத்தில் முதல்முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு சுகாதாரத் துறையில் மருத்துவா் காலிப்பணியிடங்கள் இல்லை என்கின்ற ஒரு நிலை உருவாகவுள்ளது.
பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை அதிகரிக்கும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையையும் மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்த விழாவில்,சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீண் குமாா், மண்டலக்குழு தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் எம்.ஸ்ரீதரன், ப.சுப்பிரமணி, தா.மோகன்குமாா், பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.பத்மஜா மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.