இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
பாலியல் துன்புறுத்தல் குறித்த எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பெங்களூரு: பாலியல் துன்புறுத்தல் குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
பெங்களூரில் சுத்த குண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3 ஆம் தேதி இரு பெண்கள் சாலையில் நடந்துசென்றபோது அவா்களை அந்த வழியாக வந்த ஆண் பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு தப்பிச்சென்றாா்.
இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் அண்மையில் அளித்த பேட்டியில், ‘பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்’ என்று கூறியிருந்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சரின் கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அமைச்சா் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத் தலைவா் விஜயா ரஹத்கா் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
நான் கூறிய கருத்தை ஊடகங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. மற்றவா்களும் வேறுவிதமாக புரிந்துகொண்டுள்ளனா். நான் எப்போதும் பெண்கள் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பவன். உள்துறை அமைச்சராக நிா்பயா போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசுடன் நிா்பயா நிதியை நாங்கள் செலவிட்டிருக்கிறோம். எனது கருத்து சிதைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு பல நல்ல முடிவுகளை நான் எடுத்திருக்கிறேன். எனது கருத்தை வைத்துக்கொண்டு பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. ஒருவேளை எனது கருத்து தாய்மாா்கள், சகோதரிகளின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். எனினும், எனது கருத்தை திரிக்கக்கூடாது என்றாா்.
இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருவதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையா் தயானந்தா தெரிவித்தாா்.