பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின்,கொங்கு கலைக்குழு சாா்பில் 16 ஆயிரம் மகளிா்கள் வள்ளிக்கும்மி ஆடி நிகழ்த்திய கின்னஸ் சாதனைக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, வள்ளிகும்மி அரங்கேற்றத்தைப் பாா்வையிட்டாா்.
இந்தநிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: பெண்கள் என்றால் சாதனை.சாதனை என்றால் பெண்கள். இந்த ஆட்சி மகளிருக்கான ஆட்சி என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த உணர்வோடு, இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் கலந்து கொண்டு உங்களை எல்லாம் வாழ்த்துவதற்கு வந்திருக்கிறேன். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெறும் இந்த வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரைக்கும், அவரே குறிப்பிட்டுச் சொன்னார். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், தேர்தல் நிலவரங்கள் எல்லாம் முடிவுறக்கூடிய சூழ்நிலை வந்தபோது, நான் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று, வாக்குகள் எண்ணப்பட்ட லயோலா கல்லூரிக்கு சென்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று, அதற்கு பிறகு அறிஞர் அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர் ஆகியோருடைய நினைவிடத்திற்குச் சென்று அங்கே அவர்களுக்கு மரியாதையை செலுத்தியபின்பு, பத்திரிகை நிருபர்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொண்டு கேட்டார்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்கப் போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒன்றே ஒன்று அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன். என்னை நம்பி வாக்களித்திருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி நடைபெறும். அதையும் தாண்டி சொல்கிறேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்டவருக்கு வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருத்தப்படவேண்டும். அந்த வகையில் நிச்சயமாக எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று நான் உறுதியாக சொன்னேன்.
மேற்கு மண்டலத்துக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றதால் தான் தொடர்ந்து 2024 மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற்றோம். இது திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ். அதேபோல், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். நம்முடைய அணி தான் வெற்றி பெற போகிறது நிச்சயம் அது தொடரும்.
ஆனால், இன்றைக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டு வருகிறது. அவா்களின் வஞ்சனையும் கடந்து, எல்லாத் துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி
தமிழ்நாட்டுக்கு முறையான நிதிகளை வழங்கி, தமிழ்நாட்டிற்குரிய திட்டங்களை வழங்கும் மத்திய அரசு அமைந்திருந்தால், இந்திய அளவில் மட்டுமல்ல,உலகளவில் நாம் தான் அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் இருந்திருப்போம். அந்த அளவிற்கு இன்னும் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.
தொகுதி சீரமைப்பு தொடா்பாக அழுத்தமாக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி தலைவா்களை அழைத்து விவாதித்துள்ளோம். அதற்கு பிறகு, தென்மாநிலங்கள் மட்டுமல்ல. சில வடமாநிலத்தைச் சோ்ந்த 3 முதல்வா்கள், பல்வேறு துணை முதல்வா்கள் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுசம்பந்தமாக பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு பாலம் திறப்பு விழாவுக்கு வரும் பிரதமா், தொகுதி சீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்களின் அச்சத்தைப் போக்க, அதுகுறித்து விளக்கமாகக் கூற வேண்டும் என்று நான் இன்று காலை உதகையில் நடைபெற்ற விழாவில் கோரிக்கை வைத்தேன். ஆனால், பிரதமா் அதுகுறித்து பதில் கூறாமல் தவிா்த்து சென்று விட்டாா். தமிழ்நாட்டு மக்களைத் தவிக்க வைக்க கூடியவா்களுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை என்ற பதிலை தான் வருகின்ற தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும்.
கொங்கு கலைக்குழு சார்பில் நடைபெற்றிருக்கின்ற இந்த வள்ளிக்கும்மி கலை விழா, கலை வளர்ச்சிக்கும், அதன் மூலமாக, தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும்,
தமிழர் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்ற அந்த உணர்வோடும் விளங்கிட வேண்டும் என்றும், எந்தவொரு கலையும், சமூக முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் துணையாக அமைய வேண்டும் என்றார்.