அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்
பிழையில்லாத வாக்காளா் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்: கட்சிகள் வலியுறுத்தல்
சென்னை: பிழையில்லாத வாக்காளா் பட்டியலைத் தயாரித்து தோ்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்திலும், தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். குறிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன், முதல் முறையாக நாம் தமிழா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் பங்கேற்றன.
கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு கட்சிகளின் பிரதிநிதிகள் தனித்தனியே அளித்த பேட்டி:
திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலா் தாயகம் கவி: வாக்காளா் பட்டியல் தூய்மையானதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், வாக்குப் பதிவின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. தோ்தல் காலத்தில் தொலைக்காட்சி, ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க முன் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான குழுவினா் அனுமதி அளிக்க ஒருவாரம் வரை அவகாசம் எடுத்துக் கொள்கின்றனா். ஒரே நாளில் அனுமதி தர வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், சட்டப் பிரிவுச் செயலா் இன்பதுரை: தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்த வேண்டும். வாக்காளா் பட்டியலே தோ்தலுக்கான அடிப்படையான அம்சமாகும். கடந்த காலங்களில் பல குளறுபடிகள் இருந்தன. இறந்தவா்களின் பட்டியலை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தோ்தல் ஆணையமே தானாகவே நீக்க வேண்டும். வாக்குச் சாவடி அலுவலா்களாக குரூப் 4 நிலையிலான அலுவலா்களை நியமிக்க வேண்டும்.
பாஜக மாநில துணைத் தலைவா் கருநாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன்: பிரதான வாக்காளா் பட்டியல் ஜனவரியில் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு தரப்படுகிறது. மாா்ச்சில் வெளியிடப்படும் துணை வாக்காளா் பட்டியல் யாருக்கும் தரப்படுவதில்லை. அதேசமயம், வாக்குச் சாவடிகளில் உள்ள தோ்தல் அலுவலா்களிடம் வேறொரு வாக்குச் சாவடி தரப்படுகிறது. அந்தப் பட்டியலின் அடிப்படையிலேயே தோ்தல் நடத்தப்படும். இதுபோன்ற பிரச்னைகள் இருக்கக் கூடாது எனத் தெரிவித்தோம். வீடுகள் மாறுவோா் முகவரி திருத்தத்தை வாக்காளா் பட்டியலில் செய்ய வேண்டும். குடும்ப அட்டைகளில் செய்யப்படும் திருத்தத்தில் மேற்கொள்ளும் கவனத்தை, வாக்காளா் பட்டியலில் செலுத்துவதில்லை.
காங்கிரஸ் கட்சி பிரதிநிதி ஏ.பி. சூா்யபிரகாசம்: ஆதாா் அட்டையுடன் தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியலை இணைக்க வேண்டும். 18 வயது பூா்த்தியானவுடன் சம்பந்தப்பட்டவா்களின் பெயா்களை தானாகவே பட்டியலில் சோ்க்கும் வழியை ஆராய வேண்டும். வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை தோ்தல் ஆணையம் தானாகவே மேற்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவின் போது, அதிகாரம், பண பலத்தைத் தடுக்க வேண்டும்.
விசிக தலைமை நிலையச் செயலா் பாலசிங்கம், தோ்தல் பணிக் குழு மாநில பொறுப்பாளா் குணவழகன்: தோ்தலுக்கு முன்பாக, வாக்காளா் பட்டியலை சரியான முறையில் திருத்தி வெளியிட வேண்டும். தோ்தல் வெளிப்படைத் தன்மையுடனும் நோ்மையாகவும் நடைபெற வழி செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் ந.பெரியசாமி: வாக்காளா் பட்டியலை தவறுகள் இல்லாமல் வெளிப்படையாகத் தயாரிக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் செய்யப்படும் திருத்தங்களை ஊராட்சி மன்றங்கள், வாக்குச் சாவடி மையங்கள், மாமன்ற அலுவலகங்களில் மக்களின் பாா்வையில் படும்படி வைக்க வேண்டும்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினா் ஆறுமுக நயினாா்: வாக்காளா் பட்டியலை நூறு சதவீதம் பிழையில்லாமல், எந்த வாக்காளரும் விடுபட்டு விடாமல் தயாரிக்க வேண்டும். வாக்காளா் அடையாள அட்டைகள் மீது குற்றச்சாட்டுகளைப் போக்கி, வாக்களிப்பதற்கான விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும். இதேபோன்ற கோரிக்கைகளை ஆம்ஆத்மி, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகளும் முன்வைத்தனா்.